தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை குறைப்பது எப்படி?





சமீப நாட்களாக எங்கள் ஊரில் (தமிழ்நாட்டில் தான்) நிலவி வரும் கடுமையான மின்வெட்டை தாங்கவே முடியவில்லை. வியர்வை புழுக்கத்தில் தூக்கமே வரமாட்டேன் என்கிறது. செம கடுப்பாக இருக்கிறது. அதாவது பரவாயில்லை குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள்,  தொழிலாளர்கள் இவர்களின் நிலைதான் பரிதாபம். 


இது மாதிரி பிரச்சினைக்களுக்கெல்லாம் தடவிக் கொண்டிருக்க கூடாது.  அதிகாரிகள், அனுபவமும் திறமையும் மிக்க பொறியியல் வல்லுனர்கள், சமூக சிந்தனையாளர்கள்  இவர்களை அவசரமாக கூட்டி, கலந்தாலோசித்து, போர்க்கால அடிப்படையில் முடிவெடுத்து  அமுல்படுத்தினால் பலரும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.  தமிழ்நாட்டில் தினமும்  12 நேரம் நிலவும் மின்வெட்டை ஒரே வாரத்தில் உத்திரவாதமாக பாதியாக குறைக்க எனது ஆலோசனைகள்  இவை:


ஒன்று:   மின்கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தி விட வேண்டும் (அர்த்த சாஸ்திரம்).  சிக்கனமாக பயன்படுத்தி உதவுங்கள் என்று மாண்புமிகு முதல்வரே ஊடகங்களில் வேண்டுகோள் விடுக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். யாராவது கேட்பார்களா?


இரண்டு:  எந்த ஒரு வணிக நிறுவனமும்   (ஆஸ்பத்திரி, அரசாங்க அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகள் விதிவிலக்கு) இரவு எட்டுமணிக்கு மேல் திறந்திருக்க கூடாது (கேரளா).  மின்சாரத்தை அணைத்துவிட்டு, கதவை இழுத்து பூட்டிவிட வேண்டும்.  இதற்கு தயார் செய்துகொள்வதற்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்கலாம்.  மீறினால், ஸ்பாட் பைனை போட்டுத்தீட்டி, வசூலாகும் தொகையை, ஒரு வங்கிக்கணக்கில் போட்டுவைத்து,  தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு  அரசாங்கம் செலுத்த வேண்டிய பாக்கியை செலுத்த பயன்படுத்திக்கொள்ளலாம்.

அடிப்படை உரிமை நசுக்கப்படுகிறது என சிலர் கூப்பாடு போடுவார்கள்.  அரசாங்கம் அதற்கெல்லாம் அசைய கூடாது. வாழ்வாதாரமே ஊசலாடுகிறது. முதலில் பிறப்பு உரிமை அப்புறம்தான் அடிப்படை உரிமை.


மூன்று:  எந்த மதமானாலும்  கத்தி காதை கிழிக்கும் திருவிழாக்கள், பொதுக்கூட்டம் பிரச்சாரம், தேரோட்டம், பூச்சொரிதல்  இவை எதற்கும் அனுமதி கூடாது.  டியுப் லைட்டிற்கே  ஏராளமான மின்சாரம் திருடப்படுகிறது அல்லது அனாவசியமாக செலவாகிறது.



நான்கு:   MNC கம்பெனிகளுக்கு தடையில்லாமல் வழங்கப்படும் கரெண்டில் தினமும் நாலு மணிநேரம் புடுங்கிவிட வேண்டும். பன்னாட்டு கம்பெனிகளால் வளரும் பொருளாதாரம் உண்மையான பொருளாதாரமல்ல.  பர்சில் உள்ள அதிகப்படியான பணத்தை மறைமுகமாக உருவி, செலவழிக்க செய்யும்  பகட்டுப் பொருளாதாரம் அது.

விவசாயம், சிறு-குறு தொழில்கள் ( Tiny and Small Scale Industries )  இவற்றால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், அடித்தட்டு-நடுத்தர மக்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு, அதனால் உண்டாகும் பணபுழக்கம்  இவைதான் உண்மையான பொருளாதார வளர்ச்ச்சியாகும்.


ஐந்து:  சோலார் பேனல்கள் கொண்டு (சூரிய ஒளி) மின்சாரம்  தயாரிக்கும் திட்டம் ஒரு நீண்டகால திட்டமாகும். அதிக செலவு, கூடுதலான மின்விரயம் போன்ற அதிலுள்ள சிலபல சிக்கல்களை நீக்க இப்போதே முயற்சியையும் ஆராய்ச்சியையும் துவக்குவது  நல்லது.  இல்லையெனில்  வருங்கால குழந்தைகள் நம்மை சபிப்பார்கள்.

Comments

  1. நல்ல இருக்கு ஆனா செய்றது யாரு....
    அரசாங்கம்.

    ஒரு விசியத்த யாரு நல்லா செஞ்சி முடிப்பாங்க.?
    அந்த விசியத்துல பாதிக்கப்பட்டவங்கதான்.
    இதுக்கு என்ன பன்னனும்னு ஒங்கலுக்கு சொல்ல தேவை இல்ல.
    என்னோட கருத்து இதோ.....

    அரசியல்வதிங்க வீட்ல மின்சாரத்த கட் பன்னனும்(without UPS and Generator also)

    ReplyDelete

Post a Comment